பெரியாழ்வார் திருவேங்கடநாதனிடம் அளவுக்கு அதிக ஈடுபாடு உடையவர். அதனால்தான் தன்னுடைய திருமமொழியை நிறைவு செய்கின்ற பொழுது,”
சென்னியோங்கு தண்
திருவேங்கடமுடையாய்
உலகு தன்னைவாழ நின்ற நம்பீ!
தாமோதரா! சதிரா!
என்னையும் என் உடைமையையும்
உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே
என்று அவனிடம் சரண் புகுந்து தன் பிரபந்தத்தைத் தலை கட்டினார். அதே ஈடுபாட்டை ஆண்டாளிடமும் காணலாம் .
அதனால்தான் ஆண்டாள் “வேங்கடவற்கு என்னை விதி” என்று உறுதியாக இருந்தாள். பெரியாழ்வார் பல்வேறு பாசுரங்களிலே திருமலையப்பனை திரும்பத் திரும்ப நினைத்துப் பாடியிருக்கிறார். அதில் ஒரு பாசுரம் தான் கீழ் வரும் பாசுரம்.
போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய்
போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல கத்தார்
ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன்
கோது கலமுடைக் குட்ட னேயா
குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா
வேதப் பொருளே என்வேங்கடவா
வித்தக னேஇங்கே போத ராயே.
இதில் திருமலை அப்பனை கண்ணனாக தன்னருகே அழைக்கின்றார் அப்பொழுது திருவேங்கடவன் பெருமையைக் குறிக்கும் வண்ணம் அடுக்கடுக்கான அடைமொழிகளை கொடுக்கிறார் .
கோதுகலமுடைய குட்டன்,குன்றம் எடுத்தவன், குடமாடு கூத்தன், வேதப் பொருள், வேங்கடவன், வித்தகன் என விசேஷமான குணங்களை இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் சுட்டிக்காட்டுகின்றார்.
இதில் முதல் சொல் கோதுகலமுடையவன் என்பது . பெரியாழ்வார் பயன்படுத்திய இதே சொல்லை ஆண்டாளும் தன்னுடைய திருப்பாவையில் “கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்” என்று பயன்படுத்துவதை நாம் இங்கு சிந்திக்கலாம்.
கோதுகலம் – ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம். இங்கு, ‘கோதுகலமுடை’ என்பதற்கு (‘எல்லாருடைய) கௌதூஹலத்தை(த் தன்மேல்) உடைய’ என்று பொருளாய், எல்லாராலும் விரும்பத்தக்க (குணங் களையுடைய)வனே! என்று கருத்தாம்.ஆம்; உண்மை தானே.
திருமலையப்பனை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்?மண்ணிலே நம்மைப் போல சாதாரண சம்சாரிகளிலிருந்து விண்ணை ஆளும் தேவர்கள் வரை அவனை விரும்புகின்றார்கள். அவனை வந்து சேவிக்கிறார்கள். அப்படி சேவிப்பதால் மகிழ்கிறார்கள். குதூகலம் உடையவர்களாக மாறுகின்றார்கள். அடியவருக்கு அருள்புரியும் அந்த வேங்கடவன் ஆயிரக்கணக்கில் தன்னை வந்து சேவிக்கும் பக்தர்களைப் பார்த்துச் சந்தோஷப்படுகிறான்.
சேதன லாபம் ஈஸ்வரனுக்கு அல்லவா. அப்படிப்பட்ட ஒரு சேதனன் தனக்குக் கிடைத்தால் அது அவனுக்கு எத்தனை மகிழ்ச்சி தரும்? அந்த மகிழ்ச்சியை அடையத்தான் திருமலையிலே வந்து எழுந்தருளி இருக்கின்றான்.
அடுத்த வார்த்தை குன்றமெடுத்தவன் என்பது. திருமலையப்பன் விஷயத்தில் இதே வார்த்தையை “குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்” என்ற பாசுரத்தில். நம்மாழ்வாரும் பயன்படுத்துகின்றனர். பசுக்களையும் பசுவுக்கு சமானமான சாதுக்களையும், தன்னுடைய வாக்கை நம்பி தன்னை முழுமையாக நம்பியவர்களையும் காப்பதற்காக, கிருஷ்ணாவதாரத்தில், ஒரு மலையை ஏழுநாள் சுண்டுவிரலால் தூக்கிக்கொண்டு நின்றான். அந்த ஏழு மலைகளும் இப்பொழுது எம்பெருமானை தாங்கிக் கொண்டு நிற்கின்றன. அவன் மலை மேல் நிற்கும் காட்சியைக் காணும் போதே அவன் மலையை தூக்கிய காட்சி யும் நினைவுக்கு வந்து விடுகிறது அல்லவா.
அடுத்த சொல் அற்புதமான சொல் குடமாடு கூத்தா – குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்று அழைக்கின்றார். இசையில் வல்ல கண்ணன், நாட்டியத்திலும் வல்லவன் என்பது அவன் குடக்கூத்து ஆடிய திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
திருநாங்கூர் திவ்ய தேசம் ஒன்றில் குடமாடு கூத்தன் என்கிற திரு நாமத்தோடு அவன் சேவை சாதிக்கின்றான் . சிறிய திருமடலில் திரு மங்கை ஆழ்வார் குடமாடு கூத்தை மிக அற்புதமாக வர்ணிக்கிறார்.
பெரியாழ்வாரும் வேறொரு பாத்திரத்தில் குடமாடு கூத்தைப் பற்றித் தெரிவிக்கின்றார்
குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே
மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய்
குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
குடக்கூத்து – ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக் குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து இது என்பார்கள் ; இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க, இருதோள்களிலும் இருகுடங் களிருக்க, இருகையிலுங் குடங்களை யேந்தி ஆகாசத்திலேதூக்கிப் போட்டு ஆடும் கூத்து என்பர்; இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குப வைந்துறுப்பாய்ந்து” என்றுமேற்கோளுங்காட்டினர் சிலப்பதி காரவுரையில் அடியார்க்கு நல்லார்.
அடுத்த சொல் வேதப்பொருள் – வேதங்களாற் புகழ்ந்து கூறப்படு பவனென்று கருத்து.
சதுர் வேதங்களும் அவனைப் போற்றுகின்றன. வேதத்தின் சாரமான பொருள் திருவேங்கடவன். சகல வேதங்களும் அவனைப் போற்றுவதால்தான், வேத வல்லுநர்கள், வேதம் போற்றிய பொருளான, அவனை நாள்தோறும் துதிக்கின்றனர். “சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்” என்ற பாசுரத்தில் மலைகளின் உச்சியில் அவன் இருப்பதாகப் பெரியாழ்வார் பாடுகிறார்.
இங்கே மலை உச்சி என்பது வேதங்களின் உச்சியான பிரம்ம பாகம். அந்த பிர்மத்தின் பொருளாக ப்ரம்மமாக விளங்கக் கூடியவன் திருமலையப்பன்.
எம்பெருமானாரும் ஸ்ரீ பாஷ்யத்தில் தொடக்கத்தில் “பிரஹ்மணி ஸ்ரீனி வாஸே , பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா” என்று பரப்பிரம்ம சப்தத் தின் பொருளான ஸ்ரீ வெங்கவனிடத்தில் தமக்கு பக்தியுண்டாக பிரார்திக்கிறார்.
அடுத்து வேங்கட வாணன் என்று அழைக்கின்றார். கடம் என்றால் வினை களால் ஏற்படும் பாவங்கள் அந்த பாவங்களை எல்லாம் வெந்து போகச் செய்கின்ற தலம் திருவேங்கடம். அந்தத் திருவேங்கடத்தை தனக்கு இருப் பிடமாகக் கொண்டு வாழ்பவன். வாணன் என்றால் வாழ்பவன். திருவேங் கடவத்தில் வாழ்பவன் என்று பொருள்.
அடுத்து வித்தகன் என்று அழைக்கின்றார். வித்தகன் என்றால் வல்லவன் என்று பொருள். அதிசயத் தன்மையை உடையவன் என்றும் பொருள் உண்டு. கலியு கத்தின் அதிசயமாய், கண் கண்ட தெய்வமாய் விளங்குகின்றவன் திருமலை யப்பன்.
அங்கே சென்று அவனை கண்டு வியக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? வித்தகன் என்பதற்கு இடையன் என்றும் ஒரு பொருள் உண்டு. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைநின்றவன் திருமலையப்பன்.
இந்த வித்தகத்தை நம்மாழ்வாரும் பத்துடையடியவர்க் கெளியவன் பிறர் களுக்கரிய வித்தகன் என்று . தம்முடைய திருவாய்மொழியில் பாடுகின்றார். இப்படிப் பலப்பல அடைமொழிகளால் பெரியாழ்வார் போற்றுகின்ற திரு வேங்கடநாதனை நாம் மனதில் கொள்ளுவோம். இந்தப் பாசுரத்தை தினம் பாடி பெருமானின் பேரருளைப் பெறுவோம்.
