நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!
திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகிதராகவும் தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர். புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல். திருவரங்கத்தின் கோயில் சாவி அவரிடம் தான் இருந்தது .அவர் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சீடராகி ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார். அது மேலோட்டமாக பார்த்தால் ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச்செயலின் புகழையும், வைணவ தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஓதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுதனாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம். அதாவது இன்று. திருமால் ஆலயங்களிலும் வைணவர்கள் வீடுகளிலும் இந்த நட்சத்திர வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண் டாடுவார்கள் .
பங்குனி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாள் (29/3), அமுதனார் அவதரித்த ஹஸ்த நக்ஷத்திரத்தில் நம்பெருமாள் கண்டருளும் சப்தாவரணம் அமைந்து விசேஷமாகும்!
இதில், நம்பெருமாள் வீதி புறப்பாட்டில் அத்யாபக கோஷ்டியில் இராமாநுச நூற்றந்தாதி பாசுரங்களை சேவிக்க, தாமும் மற்றும் அடியார்களும் காதுகுளிர கேட்பதற்காக சப்தமில்லாமல் (மேள ஓசையே இதில் இல்லாமல்) எழுந்தருள்வார்!
இந்த காரணத்தினால் இந்த பத்தாம் திருநாள் சப்தாவரணம் எனப்படுகிறது!
நம்பெருமாள் வீதி புறப்பாடு முடித்து, தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார்!
இராமாநுசரும் கைத்தலமாக சந்நிதி முற்றத்தில் எழுந்தருளி, நம்பெருமாளை கண்குளிர சேவிப்பார்! பெருமாள் இராமாநுசருக்கு தாம் உடுத்திக் களைந்த பீதக ஆடை, மாலை, சாத்துப்படி, சடாரி சாதிப்பார்!
