(c) S.Gokulachari
சங்கடங்களில் இருந்து
வெளியே வர இதுவே சரியான வழி”

நம் வாழ்வில் நாம் பல சமயம் கலங்குகிறோம். காரணமில்லாமல் மயங்குகிறோம். புலம்புகிறோம்.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று தவிக்கிறோம்.
இவ்வளவு நம்பினோமே? இப்படி செய்து விட்டானே என்று துடிக்கிறோம்.
சிலர் மீது அதிகமான நம்பிக்கையும் அன்பும் வைத்து அது ஆட்டம் காணும் போது நாமும் ஆட்டம் காணுகிறோம்.
சரி இவைகளிலிருந்து வெளிவருவது எப்படி? வெற்றி பெறுவது எப்படி ?
மிக எளிமையான இரண்டு விஷயங்களை விழிப்போடு கையாளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் வெற்றி வருவது இருக்கட்டும்.
தோல்வி வராது. கஷ்டம் வந்து துடிக்கும் படி நேராது.
இதை தன் அனுபவமாக நமக்குக் கொடுத்தவர் சேட்டன் பகத் என்கின்ற இந்திய எழுத்தாளர்.48 வயது. அவர் எழுதும் பத்திகளும் யூடியூப் பேச்சுக்களும் பிரபலமானவை.
இவருடைய சிறப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கையான டைம் பத்திரிகை உலகின் 100 செல்வாக்குள்ள மனிதர்களில் ஒருவராக இவரை சொல்லி இருக்கிறது.
தன்னுடைய அனுபவத்திலிருந்து தான் கற்றதாக சில விஷயங்களைச் சொல்லுகின்றார்.
மிக எளிதான விஷயங்கள்தான். நமக்கு தெரிந்த விஷயங்களாகக் கூட இருக்கலாம்.
ஆனால் அதை பட்டியலிட்டு இவர் கொடுத்திருக்கும் விதம் நம்மை சிந்திக்க வைக்கிறது.
ஏன், பின்பற்றி பார்த்தாலென்ன என்று சொல்ல வைக்கிறது.
மிக எளிமையான விஷயங்கள் தான்.
உங்களை சுற்றி இருப்பவர்கள், உங்களோடு தொடர்பு கொண்டவர்கள், என்று பலரைப் பற்றியும் நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
இன்றைக்கும் கூட ஒவ்வொருவருக்கும் ஐயாயிரம் பத்தாயிரம் முக நூல் நண்பர்கள் இருக்கிறார்கள். அது நல்ல விஷயம்.
ஆனால் உங்களை நிஜமாலுமே விரும்புகின்றவர்கள் யார் என்பதை என்று யோசித்துப் பாருங்கள்.
உங்களை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், உங்களை எந்த நேரத்திலும், உங்களுக்காகவே விரும்புகின்றவர்கள் எண்ணிக்கை ஒரு கை விரலில் அடங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இதுதான். அவர்களை விட்டு விடாதீர்கள் . அவர்களைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
காரணம் என்ன என்று சொன்னால், விரும்பியவரை ஏதோ ஒரு விதத்தில் வெட்டி விட்டு, விரும்புவதாக நடிக்கின்ற சிலரை நான் நம்புகிறோம்.
பல நேரங்களில்,முக்கிய வேளைகளில் நம்மை கை விடுபவர்கள் இவர்கள்தான்.
இரண்டாவதாக ஒருவரை அதிகம் பேர் விரும்புகின்றார்கள். நண்பர்கள் ஏராளம். என்றால் என்ன பொருள் தெரியுமா?
எப்பொழுது ஒருவருக்கு அதிகமான நட்பு வட்டாரம் கிடைக்கும் தெரியுமா?
மிக எளிதான விஷயம்.
ஒருவரிடம் பணம், பதவி, ஏதோ ஒரு விதத்தில் வெற்றி இருந்தால் அவர்களைச் சுற்றி அதிகம் பேர் இருப்பார்கள் .நிறைய நண்பர்கள் சொல்லிக்கொள்வார்கள். உண்மையில் அவர்கள் விரும்புவது உங்களை அல்ல. உங்கள் பணத்தை. உங்கள் பதவியை. உங்கள் வெற்றியை. உங்களால் கிடைக்கும் ஆதாயத்தை.
நீங்கள் நேரடியாகக் கூட அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லை .
உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சில காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.
இதில் என்ன குற்றம் என்று சொன்னால், இவர்கள் உங்களை விரும்புவதற்கு காரணமான, பணமோ, பதவியோ, இல்லாத நிலையில், அல்லது உங்கள் வெற்றியின் இறக்கத்தை கேள்விப்பட்ட நிலையில், சரசரவென்று உங்களை விட்டு அகன்று விடுவார்கள்.
நீங்களே அவர்களிடம் பேசினாலும் கூட, தெரியாதவர் போல் காட்டிக் கொள்வார்கள் .
நீங்கள் சங்கடப்படாமல் இருக்கவேண்டும் என்று சொன்னால், இதைப் போன்ற நபர்களை, நீங்கள் தனியாக பிரித்து, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
இரண்டு விஷயங்களையும் சேர்த்தால் தீருவது இதுதான்.
உன்னைப் புகழ்பவர்கள், உன்னோடு உறவு கொள்பவர்கள், உன்னை விரும்புபவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கலாம். அவர்கள் எல்லோரையும் நீ நம்பினால் மோசம் போய்விடுவாய். அதிலே இருந்து தேர்ந்தெடுத்து சிலரை நம்பு, அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவார்கள்.
இது புகழ்பெற்ற சேட்டன் பகத் சொல்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆயிரம் வருஷங்களுக்கு முன் இந்த உளவியலை நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார் ஒருவர்.. எப்படி உறவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். யார் உங்களுக்கு நிஜ உறவு? யார் உங்களுக்கு நிஜமாக நண்பர்கள்? ஒரு ருகுள ம்.
அதில் நிறைய தண்ணீர்.
நிறைய பறவைகள் வாத்துக்கள் எல்லாம் இருந்தன. கூடவே ஆம்பலும் நெய்தலும் என சில செடிகளும் அந்த குளத்திலே இருந்தன..
ஆகா நமக்கு எவ்வளவு நண்பர்கள் ,உறவுகள்…என்று அந்த குளம் நினைத்தது.
கடுமையான கோடை காலம் ஆரம்பித்தது
கொஞ்சம் கொஞ்சமாக நீர் குறைய ஆரம்பித்தது. அதிலிருந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அகன்றனர்.
தண்ணீர் முழுவதும் இல்லாத நிலையில் ஒரு பறவையோ ஒரு கொக்கோ அங்கே இல்லை.
குளம் காய்ந்த நிலையில் அங்கே ஆம்பலும் நெய்தலும் வாடி கிடந்தன ..
இப்பொழுது அந்த குள த்துக்கு ஒரு உண்மை புரிந்தது.
இந்த பறவைகள் நம்மிடம் உள்ள தண்ணீருக்காகத்தான் நம்மிடம் இருந்தன போலிருக்கிறது. ஆனால் நம்முடைய கஷ்டத்திலும் இந்த செடிகள் நம்மை விட்டு அகலாமல் இருக்கின்றன. .நம்மை உண்மையில் நேசித்தது இந்த செடிகள்தான்.நம் துன்பத்தில் துணையிருந்தது இவைதான்.என்று நினைத்ததாம்
இது உருவகக் கதை தான். இதில் கூட நிறைய கேள்விகள் கேட்கப்படலாம்.
ஆனால் இது சொல்லும் ஒரு செய்தி மகத்தானது.
வாழ்ந்தபோது கூடியிருந்து வாழ்ந்துவிட்டு சாய்ந்த போது விட்டு உறவும் நட்பும் இல்லை என்றால் …நிஜ உறவு நட்பு எது?
. உதட்டளவில் இருக்கக்கூடிய அந்த உறவுகளால் ஒருவருக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. அதனால் முதலில் எத்தனை உறவுகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்
நண்பர்கள் இருக்கட்டும் அது பேச்சில்லை. ஆனால் நமக்கென்று இருக்கக்கூடிய முக்கியமான ஒரு சில உறவுகளையும் நட்புகளையும் நீங்கள் விட்டுவிட வேண்டாம். மற்ற உறவுகளை நட்பில் இருப்பவர்களை முழுவதுமாக நம்பி விட வேண்டாம்.
இதுதான் இப்பொழுது ஆங்கில எழுத்தாளரான சொல்லும் செய்தி. இதைத்தான் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் மூதுரை ஔவையார் சொன்ன செய்தி.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு
இதில் இன்னொரு நுட்பமான அழகான ஆன்மீக செய்தியும் இருக்கிறது. நமது கஷ்டங்கள் வருகின்றது அதாவது இந்த குளத்தைப் போல, அதைக் கண்டு நாம் வருந்த வேண்டியதில்லை. அதுவும் சில படிப்பினைகளை, நன்மைகளை, செய்யவே வருகின்றன .நமக்காகவே எத்தனை உறவுகளும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கஷ்டங்கள் வருகின்றன. இதுவும் ஒரு கோணம்.
