ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் காரி நாயனார் தன்னுடைய பூத உடம்போடு கையிலை சேர்ந்து இன்புற்றார் என்பது பெருமை. இதை சேக்கிழார் பெருமான் மிக அற்புதமாக தன்னுடைய பெரிய புராணத்தில் பாடுகின்றார்.
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்விடை அறா அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.
அங்கே அவர் ஒளிஉடம்பு பெற்றார் என்பது வரலாறு .காலனை கடிந்து,தன்னை சரணடைந்த மார்க்கண்டய மகரிஷிக்கு என்றும் பதினாறு என்ற வரத்தை அளித்தவர் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் .அபிராமி அன்னை கோயில் கொண்டுள்ள அத்தலத்தில் பிறந்தவர் காரி நாயனார். செந்தமிழ் கற்றவர். நற்றமிழ் கற்ற நாவால் எப்பொழுதும் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.நான்கு வகை கவி பாடுவதில் வல்லவர் .சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடம் சேர்ந்து, பாடி,பெரும் பரிசில்களைப் பெற்று, அந்த பரிசுகளை எல்லாம் சிவன டியார்களுக்கும் சிவனுடைய திருத்தல தொண்டுக்கும் முழுமையாக பயன் படுத்துபவர். கயிலை நாதனை கன நேரமும் மறவாதவர்.அதனால் சிவ பெருமான் இவரை நேரடியாக கயிலை பதியை அளித்தார்.. அவருடைய குருபூஜை தினம் இன்று. மாசி மாதம் பூராடம்.
