நவகிரகங்களில் தலைமைக் கிரகம் சூரியன். ஆதித்யன், கதிரவன், பாஸ்கரன்,திவாகரன் என்றெல்லாம் அவனுக்குப் பெயர்கள் .உண்மையில் சூரியன் ஒரு நட்சத்திரம். சூரிய ஒளி இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. பயிர்கள் இல்லை. சூரிய வழிபாடு என்பது ஆதிகால வழிபாடு. ருக் வேதத்தில் உள்ள வழிபாடு. ருக் வேதத்தில் பல இடங்களில் சூரியனைப் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி விரதம். தை மாதத்தில் வரும் சப்தமி திதியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள்.
ரத சப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த தினம் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
வண்ணங்கள் ஏழு. ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கர ரதத்தில் அவன் வலம் வருகின்றான் .அறிவுக்கு ஆற்றலுக்கும் உரியவன் சூரியன். தந்தை, மாமனார், முதல் மகன், ஆன்மா, கனவு, கற்பனை, மனக்கோட்டை ,நிரந்தரமான வருமானம், அதிகாரிகள், நிர்வாகி, அரசியல் இவைகளுக்கெல்லாம் சூரியன் தான் காரணகத்தா. ஒரு ஜாதகத்தில் சூரியன் மிக நன்றாக அமைந்துவிட்டால் வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. சாஸ்திர நிபுணன் என்று சூரியனைச் சொல்வார்கள். எல்லா பாவங்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றவன் சூரியன். நெருப்பு எல்லாவற்றையும் அழித்து விடும் அல்லவா.சூரியன் நெருப்பு.
சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகான 7வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது.
அதன்படி இவ்வாண்டு (28.01.2023) சனிக்கிழமை ரத சப்தமி அனுஷ்டிக்கப்படுகிறது.
ரத சப்தமி அன்றுதான் சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாத காலத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். ரத சப்தமி நாளையொட்டி கங்கை உள்ளிட்ட புண்ணிய ஆறுகள், தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவார்கள். இன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.
ரத சப்தமி நாளில் என்ன செய்ய வேண்டும்?
இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும்.
ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று *”அர்க்க பத்ர ஸ்நானம்’* கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்குகிறது.
ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணை பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யலாம். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம்.
ரத சப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த நாளில் செய்யப்படும் தான, தர்மங்களுக்கும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். இவ்வாண்டு ரத சப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பார்வைக்குத் தெரியும் பகவானான சூரியனை ரத சப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, “ஓம் நமோ ஆதித்யாய… ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!” என்று சொல்லி வணங்கலாம்.
ஸப்தி ப்ரியே தேவி ஸ்பத லோகைக பூஜிதே
ஸ்பத ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸ்பதமி ஸத்வரம்!!
எனும் ஸ்துதியை ரத சப்தமி அன்று சப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை.
யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ*
*நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம் ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய*
என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்.
*ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம்பதே திவாகராய நம:* இதம் அர்க்யம் இதம் அர்க்யம், இதம் அர்க்யம்.
என்று சொல்லி ஜலம் எடுத்து பூமியில் விடவும்.
