
By S.Gokulachari
கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறுமைல் தொலைவில் உள்ளது திருநறையூர் என்ற திவ்யதேசம்.
திருநறையூர் என்றால் இன்றைக்கு யாருக்கும் தெரியாது. கும்பகோணம் திருவாரூர் பேருந்தில் ஏறி, நாச்சியார் கோவில் ஒரு டிக்கட் என்றால் அரைமணி நேரத்தில் கோவில் வாசலில் இறங்கிவிடலாம்.
உப்பிலியப்பன் கோவிலில் (திருவிண்ணகர்) இருந்தும் போகலாம்.
இங்கே உள்ள பெருமாள் திருநாமம் திருநறையூர் நம்பி. தாயார் பெயர் வஞ்ஜூளவல்லி. தமிழில் நம்பிக்கை நாச்சியார்.
மேதாவி என்ற முனிவரின் பெண்ணாகிய பிராட்டியை (வஞ்ஜூளவல்லி பெயரைச் சொல்லிப் பாருங்கள்: கம்பனின் பஞ்சு ஒளிர் பாடலின் சந்தம் தெரியும்) பகவான் தனது நிலையில் அதாவது ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாஸூதேவன் என்ற ஐந்து உருவங்களில் இங்கே பிராட்டியை திருமணம் செய்துகொள்கிறார்.
திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில் மன்னும் மணிமாடக்கோயில் என்று இத்தலத்தைப்
புகழ்கிறார்.
இத்தலத்தில் இன்னொரு சிறப்பு கருவறைக்கு மேலே அமைந்துள்ள விமானம். கோபுரம் போலவே இருக்கும்.கோச்செங்கணான் கட்டிய கோயில்.
கருடாழ்வாருக்கு இத்தலத்தில் சிறப்பு உண்டு.கல் கருட சேவை பிரசித்தம். 4பேர் தூக்கும் கருடனை 8 பேர் 16 பேர் 32 பேர் என்று தூக்கிக்கொண்டே வருவார்கள்.காரணம் தூக்கத் தூக்க எடை இரட்டிப்பாகிக்கொண்டே போகுமாம்.
இவ்வூரிலே பிராட்டிக்குத்தான் முதலிடம்.அதனால் முதலில் அன்ன வாகனத்தில் பிராட்டி போக பின்னால் கருட வாகனத்தில் பெருமான் உலா வருவார்.
ஊரே நாச்சியார்கோவில்தான்: (பெருமாள் கோவில் அல்லவே!)
எல்லாவற்றையும் விடப் பெருஞ்சிறப்பு, இத்தலத்தில்தான் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு சமாச்ரயனம் (பஞ்ச சம்ஸ்காரம்) எனும் வைணவ தீட்சைச் சடங்கைச் செய்து வைக்கிறார்.
எனவே திருமங்கை ஆழ்வாருக்கு நேர் ஆசாரியன் (குரு) இவர்.
அதனால்தான் ஒன்றல்ல: இரண்டல்ல: 110 பாசுரங்களை அள்ளிப்பொழிகிறார் ஆழ்வார்! அவ்வளவு காதல் இந்தத் திருநறையூர் நம்பி மீது.
நம்பி என்றாலே உபகாரம் செய்தவன் என்று பொருள்.
இரண்டாம் திருமொழி நான்காம் பத்தில் திருநீர்மலை மங்களாசாசனத்தில் முதல்பாடலிலே
………………இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர்.
என்று பாடி நறையூர் நம்பிக்கு ஆழ்வாரின் தமிழ் கேட்கும் ஆர்வத்தை உசுப்பி விட்டு விடுகிறார்.
திருநீர் மலையிலிருந்து திருநறையூர் அதிக தூரம்.
நம்பிக்கு ஆழ்வார் என்று வருவார் என்று கவலை.
ஆழ்வாருக்கு நம்பியை என்று காண்போம் என்று கவலை!
சோழநாட்டுத் திருப்பதிகளைச் சேவிக்கிறார்.
சீர்காழி கடந்து திருநாங்கூர் திருப்பதிகளைச் சேவித்து விட்டு மாயவரம் திருஇந்தளூர் வந்துவிட்டார்.
மறுபடி ஆழ்வாருக்கு நம்பி ஞாபகம்!
அடுத்த அச்சாரம் இங்கே கொடுக்கிறார்.
சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே!
மருவினிய மைந்தா! அந்தண் ஆலிமாலே!
சோலை மழகளிறே! நந்தா விளக்கின் சுடரே!
நறையூர் நின்ற நம்பீ! என் எந்தாய்!
திருமங்கைஆழ்வாரின் தமிழ் அழகைப் பாருங்கள். நினைத்தால் ஆழ்வார் அப்படியே தன்னுடைய பிரயாணத்தை திருப்பி காவேரிக்கு தென்பால் உள்ள திருத்தலங்கள் வழியாக திருநறையூர் சென்றிருக்கலாம்.
ஆனால் ஆழ்வார், புள்ளம்பூதங்குடி, திருவெள்ளறை என்று திருவரங்கம் போய்விடுகிறார். எதற்கும் நேரம் வரவேண்டும் அல்லவா?
திருவரங்கம் போனால் அரங்கநாதன் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவானா?
தானாக வந்த சரக்கைத் தள்ளிவிட வேண்டாமென்று ஆனானமட்டும் ஆழ்வாரிடமிருந்து தமிழைக் கறந்து கொண்டு (பாசுரம்: பால் சுரப்பதுபோலே தமிழ்ப் பாடல்கள் சுரக்கும் என்ற நயம் பாருங்கள்) அந்தண்டை விடுகிறான் அரங்கன்.
திருப்பேர் நகர் திருவிண்ணகர் என்று சேவிக்கிறார். மார்க்கண்டேயே கே்ஷத்திரமாகிய ஒப்பிலியப்பன் சந்நிதியிலே ஆர்வத்துடன் சேவிக்கும்போது மறுபடியும் நறையூர் நம்பி ஞாபகம் வந்து விடுகிறது.
திருவிண்ணகர் மூன்றாவது பதிகம் மூன்றாம் பாசுரம் தொடங்கியவுடன் ஆழ்வாரின் மனவோட்டம் திருநறையூர் போய்விடுகிறது.
கோனே! குறுங்குடியுள் குழகா திருநறையூர் தேனே என மூன்றாவது அச்சாரத்தை இங்கே கொடுக்கிறார்.
வட்டியே கொடுத்துக் கொண்டிருந்தால் அசல் என்னாவது?
இனித்தாங்காது சாமி என்று அடுத்த மங்களாசாசனத்தை திருநறையூர் எனத் திட்டமாகத் தீர்மானித்து விட்ட ஆழ்வார் வட்டியும் முதலுமாக பத்து பத்துக்களை இங்கே பாடுகிறார்.
அரங்கனுக்கு கொடுத்ததைவிட இங்கே அதிகம்.
இதிலே ஓர் அற்புதப் பாசுரம்
பந்தார் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்
கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தாமரைமேல் அயனோடு
சிவனும் அனைய பெருமையோர்
நந்தாவண்கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6.7:8)
தாமரை மேல் அமர்ந்த நான்முகனோடு சிவனும் இருப்பது போன்ற பெருமை படைத்த மறையோர்கள் கூடி உன்னைத் துதித்து வாழும்படியான திருநறையூர் என்ற திருத்தலத்திலே நின்ற வண்ணம் காட்சியளிக்கும் நம்பியே! நீ துவாபர யுகத்திலே கண்ணனாய் அவதரித்தாய்.பந்து பிடித்து விளையாடும் அழகிய விரல்களையுடைய பாஞ்சாலியின் கூந்தலை முடிக்கப் பாரதப்போரிலே சங்க நாதம் செய்தாய்.
இவ்வளவுதான் பொருள்.
திருமங்கையாழ்வார் பாசுரத்தைச் செய்கின்ற போது ஒரு வழக்கம் உண்டு.ஒரு பாதியில் திருத்தலத்தின் பெருமை தன் பார்வையில் பதிவு செய்வார்.அடுத்த பாதியில் அத்தலத்து எம்பெருமானின் பெருமையை புராண இதிகாசத்து நிகழ்வோடு இணைத்துச் சொல்வார்.
இந்தப் பாசுரத்தில் கவனிக்க வேண்டிய பகுதி முதல் பாதி.
பாஞ்சாலி கூந்தல் முடிக்க உதவ வேண்டும்.அதற்காக தனது வில்லையோ அம்பையோ எடுக்க வில்லை.பாஞ்ச சன்யம் என்கிற சங்கை வாயில் வைத்தான்.பாரதப் போர் முடிந்தது.பாஞ்சாலியின் துயரமும் தீர்ந்தது.
திருமங்கை ஆழ்வாரின் பாசுர வரிகளைப் பார்க்கும் போது பாரதியும் நினைவுக்கு வரவே செய்வார் பாரதியைப் படித்திருந்தால்.
அடியவரை எந்த விலை கொடுத்தும் காக்கின்றவன் கண்ணன்.
பாரதியின் பாஞ்சாலி சபதத்திலே ஓர் உணர்ச்சி மயமான கட்டம்.
திரௌபதியை அழைக்க துச்சாதனன் வருகிறான். அவனிடத்திலே தன்னிலையை கல் மனதும் உருகும் படி சொல்கிறாள் திரௌபதி!
அச்சா கேள்: மாதவிலக் காதலாலோராடை
தன்னில் இருக்கின்றேன்: அன்றியும்
தார்வேந்தன் பொற்சபை முன் என்னை
அழைத்தல் இயல்பில்லை
சோதரர் தன் தேவிதனை சூதில் வசமாக்கி
ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல்
மன்னர் குலத்து மரபோ காண்? அண்ணன்பால்
என்னிலைமை கூறிடுவாய் ஏகுக நீ ……..
துச்சாதனனா கேட்பான்?
பெருமூடனான அவன், அவள் அங்கம் நடுங்க, உயிர் கலங்கக் கூந்தலைப் பற்றித் தரதரவென இழுத்து வருகிறான்.
நெட்டை மரங்களாக நின்று புலம்பும் கூட்டம்.
நீதி தெரிந்தோர் வாயடைத்து நிற்க, வீராதிவீரர்கள் அவமானத்தில் தலைகவிழ்ந்து இருக்க, விதியோ கணவரே! என்று அழுகிறாள் பாஞ்சாலி.
ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம் புனல் சோர, அளகம் சோர, வேறான துகில் தகைந்த கை சோர, மெய்சோர, வேறொன்றும் கூறாது கோவிந்தா! கோவிந்தா!! என்று கதறுகிறாள்.
தேக பந்துக்கள் காப்பாற்றவில்லை.
ஆத்ம பந்து ஓடோடி வருகிறான்.
புடவையை இழுத்த துச்சாதனன் கை சலித்துப் போகிறான்.
ஆம். இழுக்க இழுக்க புடவைகள்…. புதியனவாய் ……
நல்லோர்கள் தவம் வளர்ந்ததுபோலே பல்வேறு ஆடைகள் கண்ணன் அருளால் வளர்ந்து பாஞ்சாலியின் மானத்தைக் காக்கின்றன.
(எத்தனையோ அவதாரம் எடுத்த கண்ணன் திரௌபதிக்காக புடவையாகவும் அவதாரம் எடுத்தானாம் )
திரௌபதி ஆவேசமாகச் சபதம் செய்கின்றாள்.
பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
பாழ்துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான்இது
செய்யுமுன் முடியேன்
என்று சபதமிடுகிறாள்.
அன்று திரௌபதி மானத்தைக் காத்த கண்ணன் பின்னால் அவள் செய்த சபதத்தையும் காக்கிறான்.
பாரத வெற்றி பாண்டவர்களால் பெற்றது அல்ல: பசுந்துளப மாலை அணிந்த பரந்தாமனால் பெற்றது.ஸ்ரீ வசன பூஷணம் என்றொரு அருமையான நூல். பிள்ளை உலகாரியர் செய்தது.
வைணவத்தத்துவங்களை அறிய விரும்புவோர்க்கான ரகசிய நூல் இது.
ஸ்ரீ வசன பூஷணத்திலே இரண்டு மூன்று சூத்திரங்கள் (சூத்திரம் 20,21,22) இதைத்தான் பேசுகிறது.
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் ஸரணாகதம்
என்று திரௌபதி கிருஷ்ணனைச் சரணம் புகுந்து விட்ட பின்பு அவளைக் காக்க ஓடுகிறான். இன் னொன்று இதில் விசேஷம்.
கண்ணனுக்கு முதலிலே கோபம் வருவது துரியோதனாதியர் பக்கலில் அல்ல:
பாண்டவர்கள் பக்கமே ஆகும்!
காரணம் அருகிலிருக்கிறார்கள் அவர்கள்.
திரௌபதியின் மானத்தைக் காக்கக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால் அவர்களும் வேடிக்கைத் தானே பார்த்தார்கள்.
மனைவி என்பது இருக்கட்டும்.
ஒரு பெண்ணை நடுச்சபையிலே அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லையே!
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை
வேதச் சுடர்த் தீ முன் வேண்டிய மணஞ்செய்து
பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ!
என்று முதலிலே தன்னைக் காக்கக் கடமைப்பட்ட பாண்டவர்களைத்தான் திரௌபதி கேட்கிறாள்.
அவர்கள் பொய்ச்சூதிலே தோற்றும் பொறையுடன் இருந்தனர்.
இப்படி ஒரு அடியார் துன்பப்பட அதைப்பார்த்து நிற்கின்ற பாவிகளை என்செய்வது என்றுதான் கிருஷ்ணன் கருதுகிறான்.
ஸ்ரீவசனபூஷண சூத்திரம் இது.
பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க(தண்டனை தருவதாக இருந்தும் தராமல் விட்டது) வைத்தது, த்ரௌபதியுடைய மங்கள ஸூத்ரத்துக்காக.
பாஞ்சாலியின் தாலிக்கொடிக்காக பாண்டவர்களை விட்டு வைத்தானாம் கண்ணன்.
அடியார்களை பிறர் அவமானப்படுத்தக் கண்டால், துணிவும் சக்தியும் இருப்பின் விலக்கவேண்டும். சக்தி இல்லாது இருப்பின், ஐயோ என்ற பரிதாபப்பட்டு கண் மறையப் போக வேண்டும்.
இந்த இரண்டும் பாண்டவர்களிடம் இல்லை: இருப்பினும் பாஞ்சாலியின் பக்திக்காகத் தப்பித்தார்கள்.இது மட்டுமா? தூது நடக்கிறான்.பாண்டவர்களை நம்பிப் பயனில்லை எனக்கருதுகிறாள் பாஞ்சாலி!
கற்றைக் குழல் பிடித்து கண்இலான் பெற்று எடுத்தோன்
பற்றித் துகில் உரிய பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத்தனித் திகிரிக் கோவிந்தா நீ அன்றி
அற்றைக்கு என் மானம் ஆர் வேறு காத்தாரே
கண்ணன் தூது செல்ல முடிவு செய்த பின் திரௌபதியை பார்க்கிறான். திரௌபதி கண்ணனிடம் கேட்கிறாள்.
“நீ தூது செல்கிறாய்! ஐந்து ஊரைக் கேட்கப் போகிறாய்! ஒருக்கால் அவர்கள் தந்துவிட்டால்………?”
“தந்துவிட்டால்….?”
“கண்ணா! தெரியாமல்தான் பேசுகிறாயா? அடியார் உள்ளம் அறியும் அண்ணலே! அன்று விரித்த அரும்கூந்தல் வல்வினையேன் என்று முடிப்பது இனி?”
“கவலைப்படாதே திரௌபதி! தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது போய் மீள்வேன். அதன்பின் நல்லவளே! உன் பைங்கூந்தல் நானே முடிக்கிறேன் ”
இங்கே வில்லியின் பாடலையும் பார்க்கவேண்டும். “பெண் நீர்மை குன்றாதப் பெருந்திருவின் செங்கமலக் கண்ணீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் தெள் நீரினால் பொருந்தத் தேற்றினான்சாற்றுகின்ற மண்,நீர்,அனல், அணிலம், வான் வடிவு, ஆம் மாமாயன்” என்பார் வில்லி.
அந்த மாமாயன் யார் தெரியுமா?
நந்தாவண்கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பி.
எப்பேர்ப்பட்ட தெய்வம் அவன்! அர்ச்சுனனுக்காக தேரோட்டுகின்றானே!
நான் சண்டை செய்ய மாட்டேன்! என்று வில்லையும் அம்பையும் போட்டுவிட்டுப் போன அர்ச்சுனன் பின்சென்று அவனுக்கு கீதோபதேசம் செய்து, பாரதப் போரை எப்படியெல்லாம் சமாளித்து வெற்றிபெற வைக்கிறான்? எல்லாம் எதற்காக?
அர்ச்சுனனுக்குத் தூத்ய சாரத்தியங்கள் (தேர் ஓட்டி) பண்ணிற்றும், பிரபத்தி உபதேசம் (கீதை) பண்ணிற்றும் இவளுக்காக (அடியாராகிய திரௌபதிக்காக) என்பது ஸ்ரீவசனபூஷண சூத்திரம்.
பஞ்சபாண்டவர்களைக் காத்தது அடியார் என்பதற்காக அல்ல: அடியாரோடு சம்பந்த
முடையவர்கள் என்பதற்காக என்பதுதான் இங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறது.இதுதான் பாசுரத்தின் சாரமான செய்தி.
ஆழ்வாரின் அடுத்த வரியைப் பாருங்கள்.
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
கந்து ஆர் களிறு என்றால் மதநீரின் மணம் பொருந்திய யானைகள். கழல் மன்னர் எனில் – அதில் ஏறி கம்பீரமாகப் போரில் துரியோதனனுக்காக கலந்து கொண்ட பகதத்தத்தன், ஜெயத்ரதன் முதலிய வீரர்கள்.
பீஷ்மர், துரோணர், கர்ணன், கிருபர், அசுவத்தாமன் என அணிவகுத்து நிற்கின்றவர்கள் கலங்கிப் போகுமாறு கண்ணன் போர் செய்யவில்லை. அவன் தன் சங்கில் வாய் வைத்தான்!
பாஞ்ச சன்னியம் என்ற சங்கில் வாய்வைத்து குருகே்ஷத்திர பூமியே அதிர ஒலி செய்தான்.
துரியோதனாதியர் நெஞ்சம் மட்டுமல்ல: அங்கே சஞ்சயன் மூலம் போர் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன் நெஞ்சமும் பிளவுபடும்படியாக ஒலித்தது கண்ணனின் சங்கம்!
ஸ கோஷோ தார்த்தராஷ்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்( கண்ணனின் சங்கின் ஒலி திருதராஷ்ட்ர புத்திரர்களின் இதயங்களைப்பிளந்தது.) என்பது வியாசர் காட்டும் சித்திரம்.
சங்கு ஒலியிலேயே அவர்கள் மாண்டனர்.பின் நடந்தது பெரும் யுத்தமல்ல.வெறும் யுத்தம்.
சங்கு ஊதிவிட்டான் என்றாலே முடித்து விட்டான் என்றல்லவா பொருள்.அதைச் சூசகமாக வைத்து திருமங்கையாழ்வார் காட்டுகிறார்.
இந்தப் பாசுரத்திலே தன்னைச்சரண் என்று வந்தடைந்தவர்களை தன்கௌரவம் கருதாது இறங்கி வந்து அருள்புரியும் அந்த இறையருளின் எளிய நிலையை திருமங்கையாழ்வார் சொல்லுகின்றார்.
திருநறையூர் செல்லும்போது இந்த பாசுரத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் துயரமும் அவன் சங்கின் ஒலியில் மறையும்.