மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. நவராத்திரியின் 9 ஆவது நாள் கொண்டாடப்படும் மகா நவமி தினம் தான் சரஸ்வதி பூஜை தினமாகவும் ஆயுதபூஜை தினமாகவும் கொண்டாடப் படுகிறது.

வீட்டையோ தொழில் கூடத்தையும் மாவிலை தோரணங்கள் மற்றும் வாழைமரம் போன்ற மங்கலப் பொருள்களை கொண்டு அலங்காரம் செய்யுங்கள்.பூஜை அன்று மாலை நேரத்தில், வீட்டு கருவிகள், தொழில் கருவிகள் மற்றும் உபயோகப்படுத்தும் வாகனங்களை கழுவி, சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம் வைக்க வேண்டும்.
நல்ல மலர்களை கொண்டு பூஜை அறையை அலங்கரியுங்கள். சுவாமி படங்களுக்கு முன்அனைத்து கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்குங்கள். தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை சொல்லுங்கள். பாடல்களைப் பாடுங்கள். இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம். ஆயுத பூஜை நாளில், இந்த கருவிகள், ஆயுதங்கள் அல்லது புத்தகங்களை ஒருபோதும் பூஜையில் இருந்து எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது. அடுத்த நாள் விஜயதசமியன்று சந்தனம் தெளித்து புனர் பூஜை செய்து பொருள்களை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
5.10.2022 -புதன்கிழமை – விஜயதசமி
நவராத்திரியின் பத்தாவது நாள். ஒன்பது நாட்களின் பலன் பத்தாவது நாளில் கிடைக்கிறது. தவத்தின் வெற்றி, பூஜையின் வெற்றி, செயல்களில் வெற்றி என அனைத்து வெற்றிகளும் கிடைக்கும் நாள் என்பதால் வெற்றி தரும் பத்தாம் நாள் என்று பொருள்படும் படியாக விஜயதசமி நாள் என்று அழைத்தார்கள்.
அன்னை பராசக்தி அனைத்து தீய சக்திகளையும் முற்றிலுமாக அழித்து வெற்றி கொண்ட நாள். இந்த நாளில் எந்த செயலைத் தொடங்கினாலும் அது பூரணமான வெற்றியைத் தரும். இன்றைய தினம் தொழில், புதுகணக்கு எனத் தொடங்குவதற்கு வேறு எந்த தோஷங்களையும் பார்க்க வேண்டியதில்லை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஏற்ற நாள்.
இந்த ஆண்டு விஜயதசமி புதன்கிழமையில் வருகிறது. கல்விக்கான கிரகம் புதன்.புதன்கிழமை வித்தை தொடங்குவதற்கு ஏற்ற நாள் அல்லவா. எனவே, இந்த நாளில் குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்வது நல்லது. அனேக இடங்களில் கோயில்களில் குழந்தைகளை மடியில் அமர வைத்து அட்சராப்பியாசம் செய்ய வைப்பார்கள். இன்று திருவோண விரதம் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. வைணவ ஆலயங்களில் இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில்புறப்பாடு நடந்து வன்னி மரத்துக்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.



